Tuesday, January 17, 2012

Circular on Insurance Nationalization Day


காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம்
வேலூர் கோட்டம், பதிவு எண் 640/ என்.ஏ.டி
சுற்றறிக்கை எண் 7/12                           17.01.2012
அனைத்து  உறுப்பினர்களுக்கும்
அன்பார்ந்த தோழர்களே,

தேசியமயமாக்கப்பட்ட இன்சூரன்ஸ்துறையை
என்றென்றும் காத்திடுவோம் என
தேசியமய நாளில் சூளுரைப்போம்

ஜனவரி 19, இன்சூரன்ஸ் ஊழியர்களின் வாழ்வில் ஒரு பொன்னாள். இந்தியாவிற்கு ஆகஸ்ட் 15 சுதந்திரம் கிடைத்து என்றால்  ஆயுள் இன்சூரன்ஸ் ஊழியர்களுக்கு சுதந்திரம் கிடைத்த நாள் ஜனவரி 19. அடிமைகளாய் நடத்தப் பட்ட, தனியார் இன்சூரன்ஸ் கம்பெனி ஊழியர்கள் சுதந்திரக் காற்றை சுவாசித்த நாள். தனியார் கம்பெனிகளின் அட்டகாசங்களுக்கும் ஊழல் சாம்ராஜ்யங்களுக்கும்  முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட ஒரு திருநாள்.

இந்திய சுதந்திரத்தை வென்றெடுக்க காங்கிரஸ், கம்யூனிஸ்ட், முஸ்லீம் லீக், தீவிரவாத இயக்கங்கள், நேதாஜியின் இந்திய தேசிய ராணுவம், பல வேலை நிறுத்தப் போராட்டங்களை முன்னெடுத்துச் சென்ற கப்பற்படை மாலுமிகள் உட்பட்ட தொழிற்சங்க இயக்கங்கள் களத்தில் இருந்தன. அடித்தளமாய் வேலூர் சிப்பாய் புரட்சி முதல் முதல் சுதந்திரப்போர் என பல வீர வரலாறுகள் இருந்தன.

ஆனால் இன்சூரன்ஸ் ஊழியர்களின் சுதந்திரப் போராட்டத்தில் களத்தில் கண்டது ஒரே ஒரு அமைப்புதான். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் மட்டும்தான். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் உறுதியான போராட்டம் ஆயுள் இன்சூரன்ஸ்துறையை தேசியமயமாக்கியது, எல்.ஐ.சி எனும் மகத்தான நிறுவனம் உதயமாக காரணமாக இருந்தது.

ஆயுல் இன்சூரன்ஸ் தேசியமயமானாலும் பொது இன்சூரன்ஸ்  மட்டும் தனியார் கைவசம் இருந்தது. அதனை அவர்கள் கைகளிலிருந்து விடுவிப்பதற்கான நம் போராட்டமும் தொடர்ந்தது. 1972 மே மாதம் அதுவும் சாத்தியமானது. அத்தோடு நின்று போனதா நம் இயக்கங்கள் இல்லை நிறுத்திக் கொள்ளத்தான் ஆட்சியாளர்கள் அனுமதித்தார்களா?

அன்று தொடங்கி இன்று வரை எத்தனை சோதனைகள்? எத்தனை எதிரிகள்?

கொலை வாள் கொண்டு எல்.ஐ.சி மற்றும் ஜி.ஐ.சி நிறுவனத்தை அழித்திடத்தான் எத்தனை முயற்சிகள் நடந்தன? உடமையாளராய் உள்ள ஆட்சியாளர்கள் தொடங்கி ரத்தம் வழியும் வாயுடன்  பன்னாட்டு நிதி மூலதனம் வரை எத்தனையோ பேர்! எத்தனையோ முறை!! முயன்றும் இந்நாள் வரை அவை எல்லாம் வெற்றி பெறவில்லை.

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் உறுதியான இயக்கங்கள், பாலிசிதாரர்கள், முகவர்கள் உள்ளிட்ட இந்திய தேசத்தின் உழைப்பாளி மக்கள் நமக்கு அளித்த மகத்தான ஆதரவு நம் நிறுவனத்தை சிதைக்கும் முயற்சிகளை முறியடித்தது.

எல்.ஐ.சி நிறுவனத்தின் பொதுத்துறைத் தன்மை என்றென்றும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அரசு உத்தரவாதம் தொடர வேண்டும் என்றும் இந்திய நாடாளுமன்றம் முடிவெடுத்ததும், இன்சூரன்ஸ்துறையில் அன்னிய நேரடி முதலீட்டு வரம்பு உயர்த்தப்பட வேண்டிய தேவை இல்லை என்றும் நிலைக்குழு பரிந்துரைத்ததும் நமக்குக் கிடைத்த மகத்தான வெற்றி.

இந்த வெற்றியைக் கொண்டாடும் தினமாக இந்த வருடம் இன்சூரன்ஸ் தேசிய மய நாள் அமைந்திட வேண்டும். இந்த வெற்றியைக் கொண்டாடும் அதே நேரத்தில் மற்றொரு அபாயத்தையும் மறந்து விட முடியாது.

பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களின் பங்கு விற்பனைக்கு ஆதரவாக நிலைக்குழு கூறியிருப்பதை அனுமதிக்க முடியாது. பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களில் தனியார் நுழைவதை அனுமதிக்கும் செயல் இது. அதனை நாம் முறியடிக்க வேண்டும்.

ஜி.ஐ.சி நிர்வாகம், அது அமைத்த நிர்வாக ஆலோசனைக்குழுக்கள், ஏன் நாடாளுமன்றத்தின் பொதுத்துறை நிறுவனங்களுக்கான குழு முதல் அத்தனை பேரும் பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை ஒரே நிறுவனமாக இணைக்க வேண்டும் என்ற நமது கோரிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

அக்கோரிக்கையை தீவிரமாக முன்னெடுத்துச் செல்லும் போராட்டத்தின் துவக்கமாக நாம் இன்சூரன்ஸ் தேசியமய நாளை அனுசரிக்க வேண்டும். அன்று அனைத்து கிளைகளிலும் கோரிக்கை அட்டை அணிந்து மதிய வேளை ஆர்ப்பாட்டம் நடத்திடுவோம். தேசியமயமாக்கப்பட்ட  இன்சூரன்ஸ்துறையை என்றென்றும் பாதுகாப்போம் என சூளுரைப்போம்.
வாழ்த்துக்களுடன்,
தோழமையுள்ள
ஒம். . . எஸ்.ராமன்
 பொதுச்செயலாளர்

No comments: