Thursday, December 8, 2011

Appeal For Contribution in aid of Tribal Families whose houses were demolished near Chengam


காப்பீட்டுக்  கழக  ஊழியர் சங்கம்,
வேலூர் கோட்டம், பதிவு எண் 640 / என்.ஏ.டி
சுற்றறிக்கை எண் 59 / 11                                08.12.2011
அனைத்து உறுப்பினர்களுக்கும்,
அன்பார்ந்த தோழரே,

அராஜகச்செயலால் வீடிழந்து நிற்கும் பழங்குடி இன மக்கள்,
ஆதரவாய் நாம் நிற்போம், அனைத்து உதவிகளையும் செய்வோம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகாவிலே அரியகுஞ்சூர் என்றொரு சின்னஞ்சிறிய கிராமம். அங்கே மூன்று தலைமுறைகளாக வாழ்ந்து வந்த எட்டு இருளர் பழங்குடி இன மக்கள் இன்று தங்களின் வீடுகளை இழந்து நடுத்தெருவில் நிற்கின்றனர்.

ஏன், அவர்களுக்கு  இந்த நிலை? யார் செய்த கொடுமை இது?

உள்ளாட்சித் தேர்தலிலே, அங்கே போட்டியிட்ட ஆதிக்க சக்திகளைச் சேர்ந்த ஒருவர் தோற்றுப்போக, இந்த மக்களின் வாக்குகள்தான்  தோல்விக்குக் காரணம் என்று  அந்த எளிய உழைப்பாளி மக்களின் குடிசைகளை தீயிட்டுக் கொளுத்தி உள்ளனர். அராஜகவாதிகளின் வெறி அத்தோடு அடங்கவில்லை. புல்டோசர் இயந்திரம் கொண்டு அப்பகுதியையே  மண்மேடாக  மாற்றி விட்டனர்.

விவசாயத் தொழிலாளர்களான  அவர்கள் குடிசைகளை  இழந்தனர். கைவசம் இருந்த சொற்பப் பொருட்களையும் இழந்தனர். ஆதிக்கசக்திகளின் தாக்குதல்களால் பொருளாதார ரீதியாக, மன ரீதியாக, உடல் ரீதியாகவும் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளனர்.

முன்பு குடியாத்ததில் நாம்  சந்தித்த அதே கோர நிகழ்வுதான் செங்கத்திலும் மீண்டும்  அரங்கேறியுள்ளது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இப்பிரச்சினையை  கையில் எடுத்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைப்பதற்கு, போராட்டங்கள் உள்ளிட்டு  அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகின்றது.

வாழ்வாதாரத்தை  இழந்து நிற்கும் அந்த எளிய மக்களுக்கு நம்மைப் போன்ற அமைப்பினைச் சேர்ந்தவர்கள் உதவ வேண்டியது முக்கியமான கடமை அல்லவா? பாதிக்கப்பட்ட மக்களுக்காக போராடி வருகின்ற, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் தோழர் பி.சண்முகம் அவர்கள் நம்மால் இயன்ற உதவிகளை செய்திட வேண்டும் என்று நம்பிக்கையோடு வேண்டுகோள் வைத்துள்ளார்.

பாதிக்கப்பட்ட  பழங்குடி இன மக்கள்  தங்களது இயல்பு வாழ்க்கையை துவங்கிட ஒவ்வொரு தோழரும் தங்களால் இயன்ற நிதி உதவியை  தாராளமாக செய்திடுமாறு  அன்புடன் வேண்டுகோள் விடுக்கிறோம். தாக்குதல் நடத்தினால் அந்த மக்கள் நிலை குலைந்து போவார்கள்  என்று வெறி கொண்டு தாக்கிய ஆதிக்க சக்திகளுக்கு  நாம் தருகின்ற  தக்க பதிலடியாக நம்முடைய உதவி அமையும் என்பதை மனதில் கொண்டு தங்களின் பங்களிப்பை  உடனடியாக செய்திடுமாறு  அனைத்து தோழர்களையும்  கேட்டுக் கொள்கிறோம்.
வாழ்த்துக்களுடன்,
தோழமையுள்ள
ஒம் எஸ்.ராமன்
பொதுச்செயலாளர்

No comments:

Blog Archive